Friday, 4 December 2015

Public sex பொது இடமான கோவிலில் இல்லாத ஆபாசமா - கடவுளுக்கு ஒரு நியாயம் எனக்கு வேறேயா!

கேள்வி:  ஐயா, அனேக இந்து கோவில்களில் பல நிலையில் பாலுறவு காட்சிகள் உள்ள சிலைகள் இருப்பதைக் கண்டிருக்கிறேன். பொது இடமான கோவிலில் அதை அனுமதிக்கும் சமூகம், மனிதன் அப்படி பண்ண அனுமதிப்பதில்லையே ஏன்?

என் பதில்:
கோவில்களில் அது போன்ற சிற்பங்கள் இருப்பதற்கு பல காரணங்களைச் சொல்கிறார்கள். முற்காலத்தில் சமூகத்தில் பாலியல் அறிவு மிகவும் குறைவாக இருந்த படியால் அவர்கள் தெரிந்து கொள்வதற்காக அப்படி எல்லாம் சிற்பங்கள் வைக்கப்பட்டன என்பது அதில் ஒன்று. இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

கோவில் என்பது கடவுள் குடியிருக்கும் இடம் ஆக கருதப்படுகிறது. இந்து புராணங்களில் காணப்படும் கடவுள்களின் ஒழுக்க நெறி மற்றும் பாலியல் வேட்கையே அப்படிப்பட்ட சிற்பங்களுக்கு காரணமாக இருக்குமோ என்று நான் சந்தேகப்படுகிறேன்.

மேலும் அக்காலத்தில், தேவதாசி முறை வழக்கத்தில் இருந்தபடியால் அனேக கோவில்கள் வேறுபல விஷய்ங்களுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.

இப்படி பல காரணஙளை நாம் அடுக்கிக் கொண்டு போனாலும், பொதுவில் உடலுறவு மற்றும் பாலியல் சார்ந்த விஷயங்களை இந்தியாவில் பேசுவது இன்னமும் குறைவாகவே இருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயம்தான். பொதுவில் தெளிவு பெறுவதற்காக பேசுவது என்பது வேறு, பொதுவில் public sex என்பது முற்றிலும் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் மிருகங்கள் அல்ல என்றும், ஆறறிவுள்ள மனிதர்கள் என்பதையும் மனதில் கொண்டு, செய்ய வேண்டியவைகளை மட்டுமே பொதுவில் செய்யவேண்டும். அதுவே முறை. யாராயிருந்தாலும். கற்காலாலான சிலைக்கும், கற்கால மனிதர்களின் சிந்தனைக்கும் நம் சிந்தனை எவ்வளவு மேம்பட்டது என்பதை நாம் புரிந்து அதை செயல்படுத்த வேண்டும்.

பைபிள் ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பதே பாவம் என்று சொல்கிறது. சொந்த மனைவியைத் தவிர அல்லது திருமணம் ஆவதற்கு முன்பு எந்தப் பெண்ணையும் இச்சையுடன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் நல்ல நினைவுகளே நல்ல விளைவுகளை உண்டாக்கும். பொது இடத்தில் மற்றவர்களுக்கு எவ்விதத்திலும் பாதிப்பு உண்டாக்காத விதத்தில், பேச்சிலும், செயலிலும் மற்றும் நடை உடை பாவனையிலும் இருப்பது நம் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளவாவது பயன்படும். இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும்.

உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி
tcsdoctor@gmail.com

Monday, 30 November 2015

செக்ஸ் சிந்தனைகளை மேற்கொள்வது எப்படி?

இன்றைய அதிவேக மொபைல் உலகில் அனைத்தும் விரல்நுனியில் இருக்கையில், இதுபோன்ற சில கேள்விகளுக்கான விடைகாணுவதில் மனிதன் என்றுமே தடுமாறத்தான் செய்கிறான். இன்று இணைய உலகில் நாம் விரும்பாமலேயே தவறான வலைதளங்கள் மற்றும் வீடியோக்கள் நம் பார்வைக்கு வரும் சூழலில் பல விதங்களில் நம் பாலியல் உணர்வுகள் தூண்டப்பட்டு அதற்கான வடிகால் என்ன என்று அனேகர் யோசித்து தவறான முடிவுகளை எடுத்துவிடுகின்றனர். மற்றொரு பக்கத்தில் செக்ஸ் என்றாலே அது தப்பான காரியம் என்ற தவறான சிந்தனையில் அதைப் பற்றி திறந்த மனதுடன் பேசுவதையே தவிர்த்துவிடுகின்றனர்.

பாலியல் உணர்வுகள் மனிதனுக்கு நல்ல நோக்கத்தில் இறைவனால் கொடுக்கப்பட்டது. அதை முறையாக அணுகும்போது அது மனுக்குலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செக்ஸ் சிந்தனைகள் வருவது இயல்பு என்றாலும் அதை சரியான விதத்தில் அணுகுவதிலேயே முதிர்ச்சி வெளிப்படும்.

பரிசுத்த வேதாகமத்தில் யோசேப்பு என்ற வாலிபன் தன் எஜமானனின் மனைவியால் தவறான பாலியல் உறவுக்கு வற்புறுத்தப் பட்ட போது “என் தேவனுக்கு விரோதமாக பாவம் செய்வது எப்படி?” என்று சொல்லி அவ்வாலிபன் விலகி ஓடினான். ஆம் தவறான உறவுகள் தனிமனிதனுக்கு மட்டுமல்ல, அவனைப் படைத்த இறைவனுக்கும் எதிரான செயலே. பாலியல் இச்சைகளுக்கு விலகி ஓடுவதே மிகவும் ஞானமான செயல். ஆனால் தொடர்ந்து அப்படிப் பட்ட சூழ்நிலைகளின் மத்தியில் இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தால், தண்ணீர் மேல் தாமரையாக இருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.

என் தலைக்கு மேல் பறவை பறந்து செல்வதை என்னால் தடுக்க முடியாது. ஆனால் என் தலையில் அந்த பறவை கூடு கட்டுவதை என்னால் தடுக்க முடியும் என்று ஒருவர் சொன்னது போல, நீங்கள் நினைத்தால், பாலியல் சிந்தனை உங்களை ஆக்ரமித்துக் கொள்ளாதபடி உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். கொஞ்சம் இடம் கொடுத்தால், அது முழுமையாக உங்களை ஆட்கொண்டுவிடும் என்பதை நினைவில் கொண்டு, உங்கள் முன்னுரிமைப் பட்டியல்களில் தெளிவாக இருங்கள்.


Friday, 18 January 2013

சுய புணர்ச்சி செய்யலாமா?

கேள்வி: நான் அடிக்கடி பாலியல் உணர்வுகளால் தூண்டப்பட்டு சுயபுணர்ச்சி (Masturbation) செய்கிறேன். இது சரியா? இதனால் பாதிப்புகள் உண்டாகுமா?

ஆசையை அடக்க முடியாமல், அதற்கு வடிகாலாக சுய புணர்ச்சி செய்வதை அனேகர் ஆதரிக்கின்றனர். சில மருத்துவர்களும் கூட இதில் தவறேதும் இல்லை என்கின்றனர். சுய புணர்ச்சி செய்வதால் பெரிய பாவம் செய்வதிலிருந்து அவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள் என்று கூட சிலர் சொல்கின்றனர்.

பாலியல் உணர்வுகள் என்பது மனிதர் எல்லாருக்கும் உண்டு. அதின் அளவு வித்தியாசப்படலாம்.  நம் சரீரத்திற்கு பசி ஏற்படுவதைப் போலவே பாலியல் உணர்வுகளும் உண்டாகிறது. பசிக்கிறது என்பதற்காக நாம் கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிடுவதில்லை. பாலியல் உணர்வைப் பொறுத்த வரையிலும் கூட அதே அணுகுமுறையைக் கடை பிடித்தலே சிறந்தது ஆகும்.

சுய புணர்ச்சி செய்பவர்கள் பெரும்பாலும் இனம் புரியாத ஒரு வித குற்ற உணர்வுடனேயே இருக்கின்றனர். ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பதே பாவம் என்று இயேசு சொன்னார். அனேகர் சுய புணர்ச்சி செய்கையில் Virtual உலகில் யாரையோ நினைத்துக் கொண்டுதான் அச்செயலைச் செய்கின்றனர். அல்லது அப்படிப் பட்ட வீடியோ, படங்கள் அல்லது கதைகள் ஏதாகிலும் ஒன்றால் தூண்டப்பட்டு இயங்குகின்றனர். ஆகவேதான் சுய புணர்ச்சி செய்வது தவறு என்று சொல்கிறேன்.

இன்று ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, சுய புணர்ச்சி செய்யாதவர்கள் யார்?  என்று சிலர் நினைக்கலாம். நாம் கண்டதையும் சாப்பிட்டால் அதன் பின்விளைவுகளை நாம்தான் அனுபவிக்க வேண்டும். அதேபோலவே நம் பாலியல் உணர்வுகளுக்கு சரியான ஆகாரத்தை, தகுதியான ஆகாரத்தைக் கொடுத்தால் மட்டுமே நம் வாழ்க்கை இன்புறும்.

எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆனால் எல்லாம் தகுதியாயிராது என்ற பைபிள் வாசகத்தை மனதில் இருத்துவோம். சுய புணர்ச்சி போன்ற பழக்க வழக்கங்கள் ஒரு வித அடிமைத்தனத்திற்குள்ளாக நடத்தக் கூடியதாக இருக்கிறது. அதைச் செய்தால்தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைத்து, செய்து முடித்த பின் குற்ற உணர்வுடன் இருப்பதைக் காட்டிலும், செய்யாமல் இருப்பதே மேல்.

நான் பல நாட்களாக இதைச் செய்துவருகிறேன். திடீரென்று எப்படி நிறுத்துவது என்ற கேள்வி எழலாம். பொதுவாக பாலியல் உணர்வு தானாக எவருக்கும் உண்டாவதில்லை. நம் சிந்தனைகளிலோ அல்லது நாம் எதையாவது பார்ப்பதினாலோ அல்லது வாசிப்பதினாலேயே உண்டாகிறது.  நாம் மனதில் பாலியல் உணர்வு உண்டாக்கக் கூடிய செயல்களில் கவனம் செலுத்தாமல், நம் வாழ்க்கைக்கு பயனுள்ள காரியங்களில் கவனம் செலுத்தலாம்.

An empty mind is devil's workshop என்று சொல்வார்கள் அல்லவா. ஆகவே நம் மனதை தகுதியான காரியங்களினால் நிரப்புவோம். பைபிள் வசனங்களினாலும் பக்திக்குரிய காரியங்களினாலும் நிரப்புங்கள் என்று சொல்ல மாட்டேன். மாறாக அத்துடன் இந்த உலகில் நாம் அனுபவிப்பதற்கு எத்தனையோ விசயங்கள் உள்ளன. நல்ல புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். உங்கள் சரீர புத்துணர்ச்சிக்காக எதாகிலும் கால்ப்பந்து, வாலிபால் போன்ற எதாகிலும் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். இவைகளைச் செய்யும்போது உங்கள் வாழ்க்கை சரியான திசையில் செல்வதை நீங்களே கண்டு கொள்வீர்கள்.

Wednesday, 15 June 2011

சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்

கிறிஸ்தவ பிரசங்க பீடங்களில் சில காரியங்கள் (அதிகம்) பேசப்படுவதில்லை.  அவற்றில் மிக முக்கியமானது பாலியல் சார்ந்ததும்,  எதிர்பாலினர் குறித்த அடிமனக் கேள்விகள் குறித்ததுமாகும்.

இந்த வலைப்பூவின் நோக்கம் வேதாகமத்தின் வெளிச்சத்தில் இதுவரை இருளில் இருந்த சந்தேகங்களை வெளிப்படுத்துவதும், சரீர மன ஆரோக்கியம் சார்ந்த இடுகைகளை தொடர்ந்து கொடுப்பதுமே ஆகும்.

உங்கள் கேள்விகளை தயங்காது அனுப்பலாம். ஆலோசனையும் இலவசமாக தரப்படும்.