Friday, 18 January 2013

சுய புணர்ச்சி செய்யலாமா?

கேள்வி: நான் அடிக்கடி பாலியல் உணர்வுகளால் தூண்டப்பட்டு சுயபுணர்ச்சி (Masturbation) செய்கிறேன். இது சரியா? இதனால் பாதிப்புகள் உண்டாகுமா?

ஆசையை அடக்க முடியாமல், அதற்கு வடிகாலாக சுய புணர்ச்சி செய்வதை அனேகர் ஆதரிக்கின்றனர். சில மருத்துவர்களும் கூட இதில் தவறேதும் இல்லை என்கின்றனர். சுய புணர்ச்சி செய்வதால் பெரிய பாவம் செய்வதிலிருந்து அவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள் என்று கூட சிலர் சொல்கின்றனர்.

பாலியல் உணர்வுகள் என்பது மனிதர் எல்லாருக்கும் உண்டு. அதின் அளவு வித்தியாசப்படலாம்.  நம் சரீரத்திற்கு பசி ஏற்படுவதைப் போலவே பாலியல் உணர்வுகளும் உண்டாகிறது. பசிக்கிறது என்பதற்காக நாம் கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிடுவதில்லை. பாலியல் உணர்வைப் பொறுத்த வரையிலும் கூட அதே அணுகுமுறையைக் கடை பிடித்தலே சிறந்தது ஆகும்.

சுய புணர்ச்சி செய்பவர்கள் பெரும்பாலும் இனம் புரியாத ஒரு வித குற்ற உணர்வுடனேயே இருக்கின்றனர். ஒரு பெண்ணை இச்சையுடன் பார்ப்பதே பாவம் என்று இயேசு சொன்னார். அனேகர் சுய புணர்ச்சி செய்கையில் Virtual உலகில் யாரையோ நினைத்துக் கொண்டுதான் அச்செயலைச் செய்கின்றனர். அல்லது அப்படிப் பட்ட வீடியோ, படங்கள் அல்லது கதைகள் ஏதாகிலும் ஒன்றால் தூண்டப்பட்டு இயங்குகின்றனர். ஆகவேதான் சுய புணர்ச்சி செய்வது தவறு என்று சொல்கிறேன்.

இன்று ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, சுய புணர்ச்சி செய்யாதவர்கள் யார்?  என்று சிலர் நினைக்கலாம். நாம் கண்டதையும் சாப்பிட்டால் அதன் பின்விளைவுகளை நாம்தான் அனுபவிக்க வேண்டும். அதேபோலவே நம் பாலியல் உணர்வுகளுக்கு சரியான ஆகாரத்தை, தகுதியான ஆகாரத்தைக் கொடுத்தால் மட்டுமே நம் வாழ்க்கை இன்புறும்.

எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆனால் எல்லாம் தகுதியாயிராது என்ற பைபிள் வாசகத்தை மனதில் இருத்துவோம். சுய புணர்ச்சி போன்ற பழக்க வழக்கங்கள் ஒரு வித அடிமைத்தனத்திற்குள்ளாக நடத்தக் கூடியதாக இருக்கிறது. அதைச் செய்தால்தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைத்து, செய்து முடித்த பின் குற்ற உணர்வுடன் இருப்பதைக் காட்டிலும், செய்யாமல் இருப்பதே மேல்.

நான் பல நாட்களாக இதைச் செய்துவருகிறேன். திடீரென்று எப்படி நிறுத்துவது என்ற கேள்வி எழலாம். பொதுவாக பாலியல் உணர்வு தானாக எவருக்கும் உண்டாவதில்லை. நம் சிந்தனைகளிலோ அல்லது நாம் எதையாவது பார்ப்பதினாலோ அல்லது வாசிப்பதினாலேயே உண்டாகிறது.  நாம் மனதில் பாலியல் உணர்வு உண்டாக்கக் கூடிய செயல்களில் கவனம் செலுத்தாமல், நம் வாழ்க்கைக்கு பயனுள்ள காரியங்களில் கவனம் செலுத்தலாம்.

An empty mind is devil's workshop என்று சொல்வார்கள் அல்லவா. ஆகவே நம் மனதை தகுதியான காரியங்களினால் நிரப்புவோம். பைபிள் வசனங்களினாலும் பக்திக்குரிய காரியங்களினாலும் நிரப்புங்கள் என்று சொல்ல மாட்டேன். மாறாக அத்துடன் இந்த உலகில் நாம் அனுபவிப்பதற்கு எத்தனையோ விசயங்கள் உள்ளன. நல்ல புத்தகங்களைத் தேடி வாசியுங்கள். உங்கள் சரீர புத்துணர்ச்சிக்காக எதாகிலும் கால்ப்பந்து, வாலிபால் போன்ற எதாகிலும் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். இவைகளைச் செய்யும்போது உங்கள் வாழ்க்கை சரியான திசையில் செல்வதை நீங்களே கண்டு கொள்வீர்கள்.